செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும்பரிகாரமும் !
செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும்பரிகாரமும் !
ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். இதனை கிரக யுத்தம் என்றும் சொல்லலாம். இந்த செவ்வாய்-சனி ஒரே இராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். ஆனால் எந்த கிரகங்களும் துணை இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது. செவ்வாய்-சனியும் ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச்செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது.கண் உபாதை உண்டாக்குகிறது. லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம்செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது. லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை. லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் கோர்ட்டு வரை இழுத்து செல்கிறது. இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து வைக்கிறது. லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும். லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாறவைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது. லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும். லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலைசீராக வைக்காது. லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம்இருக்காது. என்னடா வாழ்க்கை என்று சலிக்க வைக்கும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். விரயங்கள் விரைந்து வரும். தூர பயணத்தில் வெகு கவனம் தேவை. பரிகாரம் இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்ய வேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்கு கட்டுப்படும். சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும். முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடியபாதிப்புகள் கட்டுப்படும். இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்ககூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன்நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும். இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும். விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன் நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது. நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிப்படுங்கள். துன்பம் செய்ய வேண்டிய அவர்களே நம் அன்புக்குகட்டுப்பட்டு இன்பங்களை அள்ளி தருவார்கள்.
Comments
Post a Comment