பித்ரு பூஜை
பித்ரு பூஜை ஒரு அறிவியல் பார்வை*
*****************************************
*(புரட்டாசி மஹாளய பட்சத்தினுள் ஒளிந்திருக்கும்இந்து தர்ம (ஜோதிட) விஞ்ஞான ரகசியம்.)*
நமது தாத்தாக்கள், பாட்டிகள், முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள், பூட்டன்கள் (தாத்தாவின் தாத்தா), பூட்டிகள் (பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்குதிதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
புரட்டாசி மாதம் பித்ருக்களுக்குசிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள், தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.
வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்து, சூரிய மண்டலம், நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு (அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள், ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது. பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின. அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன.
இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும். அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது. எப்படி பூமியானது சூரியனிலிருந்துஉண்டாகி, சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ, அப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகி, அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.பித்ருக்களின் வழிஒரு மையத்திலிருந்துஉண்டானது, பிரளயகாலத்தின் போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும். நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்; சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்; அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்; மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம் (பித்ருக்களின் வழி) என்பார்கள்.இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது. இங்கு ஒரு கேள்வி எழலாம்? பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்,ஏது திசை? முடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாமாமாமாண்டமான பிரபஞ்சத்திற்குஏது திசை?இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.
துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும். இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும். பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு, எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும். இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.கன்னிராசியானது,பூமியின் தென் துருவத்துக்குக்கீழ் தென்படுகிறது.
அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது. அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது. நாம் உண்டான மையம் தெற்கு திசையில், கன்னிராசியில் இருக்கவே, இறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள். எனவே, அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம்.
அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம். இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம். அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.பித்ருக்களின் காலக்கணக்குசூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம் (சந்திரமானம்) என்பது உண்டு. அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது. இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விளக்கம்:1 பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்12 பித்ருமாதம்(720பட்சம்)=ஒரு பித்ரு வருடம்இதை திதியாக மாற்றினால்,ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதிஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள்10,800 திதி/360 திதி =30 வருடம்அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.
ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால், பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும். அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம். அதனால், பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும் (15 நாட்கள்) பித்ருக்களுக்குவழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர்நமது முன்னோர்கள்.தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம். இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு, சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும்சென்றடைகிறது.
இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம், நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு எனலாம்.
மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.
பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.
ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
Comments
Post a Comment